கர்த்தரை நேசிப்பது என்பது ஒருவரையொருவர் நேசிப்பதன் மூலம் செய்யக்கூடியது என்று நாம் நம்புகிறோம். இந்த கத்தார் தேசத்திலே கர்த்தரை ஆராதிக்கவும், விசுவாசிகளின் ஐக்கியத்தில் மகிழவும் அவர் கிருபையாகவும் அன்பாகவும் NGFஐ ஒரே குடும்பமாகக் கட்டியிருக்கிறார். நம் சபையை அற்புதமாகவும் ஆச்சரியவிதமாகவும் நடத்தி வந்திருப்பதைத் திரும்பிப் பார்க்கும்போது நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 1999ஆம் ஆண்டில் ஆண்டவர் எனக்குக் கொடுத்த தரிசனத்தையும், 2000இல் அவர் சகரியா மூன்றாம் அதிகாரத்தின்படி வாக்கு தந்து உறுதிப்படுத்தி என்னை அழைத்ததையும், நான் தொடர்ந்து நினைவுகூர்கிறேன்.
கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைப் பாதுகாக்கிறார். வெளி. 3:11இல் ‘இதோ சீக்கிரமாய் வருகிறேன்’ என்றும், மத்தேயு 24:44இல் ‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.’ என்றும் அவர் சொன்னார். அவருடைய வருகைக்கான அடையாளங்களும் காலமும் நெருங்கி வருவது கண்கூடு என்பதாலும், அவர் தமது வார்த்தையில் உண்மையுள்ளவர் என்பதை நாம் அறிந்திருப்பதாலும், உலகக் காரியங்களில் கவனம் செலுத்தாமல் அவரில் கவனம் செலுத்தி, திருச்சபையாக நாம் அவருடைய வருகைக்கான ஆயத்தத்தில் நம்முடைய பங்கை நிறைவேற்ற வேண்டும். அவரைத் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்திப்பதற்கான ஆயத்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்துகொள்ள அன்பு நிறைந்த இதயத்துடன் உங்களை அழைக்கிறோம்.
அவருடைய திருச்சபையின் மீதான பேரன்புடன்,
Ps. அருண்குமார்